தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த அரசு முன் வர வேண்டும் : ஸ்டாலின்
உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த அரசு முன் வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேரவையில் வலியுறுத்தினார். 3 வருடங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லை என்றும் மத்திய அரசின் நிதி கிடைப்பதிலும் சிக்கல் எழுந்துள்ளது என்றும் ஸ்டாலின் சாடினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால், மத்திய அரசு விடுவிக்க வேண்டிய 2017-18ம் ஆண்டு முதல் 2018-19 வரையில் அடிப்படை மானியத் தொகை விடுவிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.
மத்திய நிதி குழு மானியத்தை உடனடியாக விடுவிக்க கோரி, பலமுறை டெல்லிக்கு நேரில் சென்று, மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன், உர்தீப் சிங் பூரி, பியூஷ் கோயல் உள்ளிட்டவர்களை நேரில் சந்தித்து தொடர் கோரிக்கை விடுததாக அமைச்சர் கூறினார்.

குறிப்பாக மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சுமார் 8 முறை நேரில் சந்தித்து, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள காரணத்தால், உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாத நிலையை விளக்கினேன். மத்திய நிதிக்குழு மானியத் தொகையை தமிழகத்திற்கு உடனடியாக விடுவிக்குமாறும் கோரினேன்.
இதனையடுத்து இதுவரை விடுவிக்ககப்பட்டுள்ள நிதியை தவிர்த்து இன்னும் 3,780 கோடி 80 லட்சம் ரூபாய் மட்டுமே விடுவிக்கப்பட வேண்டியுள்ளது என குறிப்பிட்டார். மேலும் உள்ளாட்சி அமைப்புளில் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளது என விளக்கமளித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




