அரசு திட்டங்களுக்காக தனியார் நிலங்களை கையகப்படுத்த நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடி அமர்வு சட்டத்தை மத்திய அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த புதிய சட்டத்திலிருந்து மாநிலஅரசின் நில கையகப்படுத்தும் சட்டங்களான மாநில நெடுஞ்சாலைகள் சட்டம், தொழில் பயன்பாட்டிற்கான நில கையகப்படுத்தும் சட்டம் மற்றும் ஹரிஜன் நல சட்டம் ஆகிய சட்டங்களை பாதுகாக்கும் வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு 105A என்ற சட்டபிரிவை சேர்த்து நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடி அமர்வு என்ற சட்டத்தை கொண்டு வந்தது.
மத்திய அரசு சட்டம் கொண்டு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசு கொண்டு வந்த இந்த புதிய சட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி ராமநாதபுரத்தை சேர்ந்த கருணாநிதி உட்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி மணிக்குமார் மற்றும் சுப்ரமணியன் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சட்டத்தில் இருந்தது போல தமிழக அரசு கொண்டு வந்த இந்த புதிய சட்டத்தில் பொது மக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடத்தாமல் நிலங்களை கையகப்படுத்த கூடாது என்ற விதி இல்லை என மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வாதிட்டார். நிலம் கையகப்படுத்தியதும் 6 மாதத்தில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விதிகள் இல்லாததும் நில உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
கையகப்படுத்தும் நிலத்தின் மதிப்பை 2 மடங்கு வரைஇழப்பீடு வழங்க வேண்டும் என்றும், விவசாய நிலத்தை கையகப்படுத்த கூடாது என்றும், மத்திய சட்டத்தில் கூறப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசின் இந்த சட்டத்தில் இது போன்ற வழிவகைகள் இல்லை எனவும் குற்றம் சாட்டினார். தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்தால் சுமார் 80,000 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்கள் பாதிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தை செல்லாது என அறிவித்து தீர்ப்பளித்தனர்.மேலும் இந்த மூன்று நில கையகப்படுத்துதலின் சட்டங்களின் கீழ் தமிழக அரசால் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து இருந்தால் இந்த தீர்ப்பு பொருந்தாது எனவும், செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு மட்டும் இந்த தீர்ப்பு பொருந்தும் என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.