--- --:--:-- --

இறால்களுக்கு உணவான 150 கிலோ பாலி புழு பறிமுதல் சென்னைக்கு கடத்த முயன்ற 8 பேர் கைது

20

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வன சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் வன பணியாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதியில் நேற்றிரவு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வலையர்வாடி பகுதியில் அடையாளம் தெரியாத 8 பேர் நிற்பதாக வனச் சரக அலுவலர் வெங்கடேஷூக்கு தகவல் தெரிவித்தனர்.

 

இதன்படி, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனச் சரக அலுவலர் தலைமையில் வன பணியாளர்கள் அங்கு சென்றனர். அங்குள்ள ஒரு குடிசையில் பார்சல் செய்த 4 தெர்மகூல் பெட்டிகளுடன் நின்ற 8 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் திருவள்ளூரைச் சேர்ந்த கேசவ வேல் மகன் பெருமாள் 36,கடலூரைச் சேர்ந்த செங்கேணி 45,குமார் மகன் ராமர் 22,சாமிதுரை மகன் சுப்ரமணியன் 21, தங்கராஜ் மகன்கள் கோபி 36,
விஜய் 21,மகாலிங்கம் மகன்கள் சந்திரன் 31,கார்த்திகேயன் 27,ஆகியோர் எனவும், தூண்டில் மூலம் மீன்பிடிக்க வந்ததாகவும் கூறினர்.

 

அவர்கள் வைத்திருந்த தெர்மகூல் பெட்டி பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் 18 பாக்கெட்களில் பாலி புழுக்கள் கிலோ கணக்கில் இருந்தன. வணிகரீதியாக தடைசெய்யப்பட்ட பாலி புழுக்களை பறிமுதல் செய்து, 8 பேரையும் கைது செய்து இராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் கூறியதாவது: பாலிசிட்டா எனப்படும் மெல்லுடலிகள் வகையைச் சேர்ந்த பாலி புழுக்கள் கடலோர சேறு பகுதியில் இனப்பெருக்கம் அடைகின்றன. பண்ணைகளில் வளர்க்கப்படும் இறால்களுக்கு உணவாக பயன்படுத்தப்படும் பாலி புழுக்கள் வணிகரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது.

 

சென்னை, கடலூர் பகுதிகளில் இருந்து மீனவர் போர்வையில் இங்கு வந்து வணிகரீதியாக தடைசெய்யப்பட்ட பாலி புழுக்களை பிடித்து சட்ட விரோதமாக கடத்த முயன்றபோது பெருமாள் உள்பட 8 பேர் சிக்கினர். பறிமுதல் செய்யப்பட்ட 150 கிலோ பாலி புழுக்களுடன் 8 பேரையும் இராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம் என்றார்.

Leave a Reply

Right Menu Icon