கேரள முதலமைச்சராக வி.டி.சதீசன் இன்று பதவியேற்பு..!
கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. இருப்பினும் முதலமைச்சரை தேர்வு செய்வதில் 10 நாட்களாக இழுபறி நீடித்து வந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி.சதீசனை முதலமைச்சராக அறிவித்தது காங்கிரஸ் கட்சி தலைமை.
இதையடுத்து ஆளுநர் ஆர்லேக்கரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் வி.டி.சதீசன். இந்நிலையில் கேரளாவின் 13ஆவது முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் சதீசன், திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இதனிடையே ரமேஷ் சென்னிதலா, கே.முரளீதரன், சன்னி ஜோசப், பிந்து கிருஷ்ணா, ஏ.பி.அனில் குமார், பி.சி.விஷ்ணுநாத், எம்.லிஜு, ரோஜி எம்.ஜான் உள்ளிட்ட 21 பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டியலை விடி சதீசன் அறிவித்தார். மேலும், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ள நிலையில் கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட அளவிலான கூட்டம் கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் பெரும்பான்மையுடன் விசிக இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில் அண்டை மாநிலமான கேரளாவிலும் கட்சியை அதிகாரப்பூர்வமாக விரிவுபடுத்தும் பணியை தவெக தொடங்கியுள்ளது. அதன்படி திருச்சூர் மாவட்டத்தில் தவெகவின் முதல் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. கேரள அரசியலில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கூட்டணி இரு துருவ அரசியலாக இருந்து வரும் நிலையில் தற்போது தவெக-வின் திடீர் அரசியல் எண்ட்ரி கவனத்தை ஈர்த்துள்ளது.





