ஆடு, கோழி திருடிய சகோதர்கள் இருவர் அடித்துக் கொலை..!
சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி அருகே ஆடு, கோழி திருடர்களை கிராம மக்கள் அடித்துக் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருமலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்புவிற்கு அழகமா நகரி கிராமத்தில் தோப்பு உள்ளது. இங்கு ஆடு மற்றும் கோழிகள் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், நேற்றிரவு அந்த தோப்புக்குள் புகுந்த மர்ம நபர்கள் ஆடு, கோழிகளை திருடியதாகத் தெரிகிறது. அப்போது கோழிகள் கத்தும் சத்தம் கேட்டு அங்கு திரண்ட மக்கள் ஆடு மற்றும் சாக்கு பைகளில் கோழிகளுடன் இருந்த திருடர்கள் இருவரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கினர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் திருடர்கள் இருவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனையில் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த இருவரும் அருகே உள்ள கட்டாணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், சிவசங்கரன் ஆகியோர் என்பதும் இருவரும் சகோதரர்கள் என்பதும் தெரியவந்தது. இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 10 பேரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.






