முதலமைச்சர் விஜயின் வருகைக்காக… தயாராகும் கர்நாடக சட்டமன்ற வளாகம்..!
மேகதாது அணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் செல்வதை அம்மாநில முதலமைச்சர் டிகே சிவக்குமார் மீண்டும் உறுதிப்படுத்தினார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஞாயிறன்று கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் எனக் கூறினார். இதனிடையே, இனியும் கர்நாடக அரசு நியாயம் செய்யும் என நம்புவதற்கு இடமில்லை என தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாட்டின் சார்பில் நியாயமான குரலை உரத்து வெளிப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.மற்றொரு புறம், மேகதாது விவகாரத்தில் பேச்சு நடத்த வரும் 3-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் பெங்களூரு செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், கர்நாடக சட்டமன்ற வளாகத்தில் சந்திப்பிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் விஜயின் வருகைக்காக கர்நாடக சட்டமன்ற வளாகமான விதான் சவுதாவை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு – கர்நாடகா இடையே மேகதாது அணை விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், அது குறித்து கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருடன் பேச்சு நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, வரும் 3-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு தரப்பில், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், சந்திப்பு குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் தனக்கு கடிதம் எழுதியதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள விதான் சவுதாவில் இரு மாநில முதலமைச்சர்களின் சந்திப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் விஜய் செல்லும் வழிகள் மற்றும் முதலமைச்சர்கள் சந்திக்கும் அறையை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், காவிரி ஆற்றுப்படுகைகள் மற்றும் அணைகளை முதலமைச்சர் விஜய் ஹெலிகாப்டரில் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தரப்பில் அதை ஏற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், முதலமைச்சர் விஜயின் கர்நாடகப் பயணம் குறித்து அவரது அலுவலகமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெளிவுபடுத்தியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் விஜயின் கர்நாடக பயணம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார். வரும் காலங்களில் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதலே கணினி அறிவியல் பாடத்தைக் கொண்டு வர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.



