ஜெம்ஸ் மிட்டாய் என பட்டன் பேட்டரியை விழுங்கிய சிறுமி..!
சென்னை அயனாவரம் வடக்கு மாட வீதி தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கணேஷ். இவரது நான்கரை வயது மகள் தனுஸ்ரீ. அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு குழந்தை வீட்டில் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது பொம்மை ஒன்றில் இருந்து பேட்டரி கீழே விழுந்தது. வட்டவடிவிலான பேட்டரியை எடுத்து ஜெம்ஸ் மிட்டாய் என நினைத்து சிறுமி விழுங்கியதாக கூறப்படுகிறது. சிறுமியின் அழுகை சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் பேட்டரி தொண்டையில் சிக்கிக் கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றனர்.
அங்கு சிறுமிக்கு உதவி செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எக்ஸ்ரே செய்து பார்த்ததில் பேட்டரி உணவு குடல் பகுதியில் இருந்ததாகவும் குழந்தைக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் அதனை வெளியே எடுத்து விடலாம் எனவும் மருத்துவர்கள் நம்பிக்கை தருவதாக குழந்தையின் தாய் தெரிவித்தார்.






