தவெக தலைவர் விஜய் மீண்டும் பரப்புரை..!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீண்டும் பரப்புரை பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். அடுத்தகட்டமாக பரப்புரை பயணம் செய்யவிருக்கும் இடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளன. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் முடங்கியிருந்த நிலையில், ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு தீவிரமடைந்துள்ளன. அதன்படி, அண்மையில் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் விஜய் தலைமையில் தற்போது தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் மீண்டும் தவெக தலைவர் விஜய் பரப்புரை பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார். அடுத்தகட்டமாக சேலத்தில் அவர் பரப்புரையில் ஈடுபட இருக்கிறார். தமிழக வெற்றி கழகம் சார்பில் சேலத்தில் டிசம்பர் மாதம் நான்காம் தேதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தற்போது தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் அனுமதி கேட்டு மனு கொடுத்து உள்ளனர்.
அதன்படி, சேலத்தில் பிரச்சாரம், பொதுக்கூட்டம் நடத்த தவெக சார்பில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மனுவில், கோட்டை மைதானம், போஸ் மைதானம், சீலநாயக்கன்பட்டி ஆகிய மூன்று இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை வழங்க அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக காவல்துறையிடம் அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது.
ஒரு வாரத்தில் 2 நாட்கள், 2 மாவட்டங்கள் விஜய் செல்லவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. கடந்த முறை வார இறுதி நாளான சனிக்கிழமை மட்டும் விஜயின் மக்கள் சந்திப்பு நடத்தப்பட்டது. ஆனால் இந்த முறை வார நாட்களில் சந்திப்பை தொடங்கவுள்ளனர். அதன்படி வியாழக்கிழமை சேலத்தில் மக்கள் சந்திப்புக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது.





