தைப்பூசத்தை முன்னிட்டு 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
தைப்பூசம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சுமார் 1205 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சனி, ஞாயிறு வார விடுமுறை நாள்கள் மற்றும் தைப்பூசத்தை ஒட்டி சென்னையிலிருந்தும், மாநிலத்தின் பிற இடங்களுக்கு இடையேயும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி சென்னை கிளம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 360 பேருந்துகளும், சனிக்கிழமை 485 பேருந்துகளும் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதேபோல சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 60 பேருந்துகளும், சனிக்கிழமை 60 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் www.tnstc.in மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.






