பேருந்தின் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு சென்ற மாணவர் கீழே விழுந்ததால் அதிர்ச்சி..!
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் பேருந்து நிலையத்திற்கு அருகே அரசுப் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு சென்ற மாணவர் கீழே விழுந்ததில் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
சோத்துபாக்கம் பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மாணவன் அங்கிருந்து அஞ்சலகத்தில் இருக்கும் தனது பள்ளிக்கு அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தார். அப்போது பேருந்தில் தொங்கி கொண்டு வந்த மாணவன் விழுந்ததில் தலையில் பலமாக அடிபட்டதால் நிலைதடுமாறிய மாணவர் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கீழே விழுந்துள்ளார்.
பின்னால் வாகனங்கள் எதுவும் வராததால் மாணவர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார். கீழே விழுந்த மாணவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பார்ப்பவர்களை பதற்றம் அடைய வைத்துள்ளது. பேருந்து படிக்கட்டில் நின்று பயணிக்கக் கூடாது என்று அரசு எச்சரித்து வந்தாலும் இது போன்ற நிகழ்வுகள் நடப்பதால் அச்சமாக இருப்பதாக பயணிகள் கூறி வருகின்றனர்.





