இவர்தான் எங்கள் முதல்வர் வேட்பாளர்! சரத்குமார் யாரை கைகாட்டுகிறார் தெரியுமா?
வரும் சட்டசபைத் தேர்தலில் 3வது அணியின் முதல்வர் வேட்பாளர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தான் என்று சரத்குமார் அறிவித்துள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6வது பொதுக்குழு கூட்டம், தூத்துக்குடியில் உள்ள திரவியபுரத்தில் இன்று நடைபெற்றது. இதில், ம கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக சரத்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். முதன்மை துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு ராதிகா சரத்குமார் தேர்வு செய்யப்பட்டார்.
அண்மையில் அதிமுக கூட்டணியில் இருந்து சமக விலகியது; அதே சூட்டோடு பாரிவேந்தரின் ஐஜேகே, கமலின் மக்கள் நீதிமய்யம் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க சரத்குமார் திட்டமிட்டார். இது குறித்து கமல் உள்ளிட்டோருடன் சரதகுமார் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
இந்நிலையில் தூத்துக்குடி பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் இன்று பேசியதாவது: வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் , ஐ.ஜே.கே. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சமத்துவ மக்கள் கட்சி களமிறங்கவுள்ளது. இந்த கூட்டணி உறுதியானது. எங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் கமல்ஹாசன் தான்.
வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு தமிழக அரசு தற்போது வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு அறிவித்துள்ளது. வாக்கு வங்கியை கவனத்தில் கொண்டு முடிவெடுக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். மக்கள் விரும்பும் கூட்டணியாக எங்கள் கூட்டணி இருக்கும். கொள்கை ரீதியாக நாங்கள் ஒன்று சேர்ந்திருக்கிறோம்.
இந்த சரத்குமாரின் தேவை, முன்பு அதிமுகவுக்கு தேவைப்பட்டது. இப்போது அவர்களுக்கு சரத்குமார் கண்ணுக்கு தெரியவில்லை. விரைவில் அவர்களுக்கு சரத்குமார் யார் என்று தெரியும். கோவில்பட்டி, ராதாபுரம், வேளச்சேரி தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும். அப்போது அதன் பலம் உங்களுக்கெல்லாம் தெரியும் என்று சரத்குமார் பேசினார்.





