சிக்கிம் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியீடு..!
சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 31 இடங்களில் அமோக வெற்றிபெற்று, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆட்சியை தக்கவைத்துள்ளது.2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுடன் சிக்கிம், ஒடிசா, ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.
ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி அறிவிக்கப்படும் நிலையில், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கான சட்டப்பேரவையின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால், இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.
அதன்படி சிக்கிம் மாநிலத்தில் மொத்தமுள்ள 32 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதில், பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 6 மணிமுதல் எண்ணப்பட்டன.
இதில், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 31 தொகுதிகளில் வெற்றிவாகை சூடியது. சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி ஒரு தொகுதியைக் கைப்பற்றியது. பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
சிக்கிம் மாநிலத்தில் ஆட்சியமைக்க 17 இடங்களில் வெற்றி பெற வேண்டிய நிலையில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 31 இடங்களைக் கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது. மேலும், ஆட்சியை தக்க வைத்துள்ளது.





