கோத்தபய ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு : டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ கைது!!
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே புதிய அதிபராக வெற்றி பெற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார். இதையேற்ற கோத்தபய ராஜபக்சே, 3 நாள் அரசு முறைப் பயணமாக இன்று டெல்லி வருகிறார். அதிபராக பதவியேற்ற பின், கோத்தபய மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணமாகவும் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

கோத்தபய ராஜபக்சேவின், இந்தியப் பயணத்திற்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிராக 2009-ல் நடந்த இறுதி யுத்தத்தில், தமிழர்களை கொன்று குவித்ததில் முக்கியப் பங்கு வகித்த கோத்தபய ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் வைகோ அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று மாலை கோத்தபய ராஜபக்சே இன்று மாலை டெல்லி வருவதை எதிர்த்து, டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று காலை வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் கணேசமூர்த்தி எம்.பி உள்பட மதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி ஊர்வலமாக செல்ல முயன்ற வைகோ உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.





