சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என நடிகர்கள் கூறுவது மனசாட்சியற்றது எனக்கூறும் தயாரிப்பாளர்கள்..!
பொது முடக்கத்தால் திரைத்துறை பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என பெப்சி தொழிலாளர்கள் கூறுவது மனசாட்சியற்ற செயல் என்ற தமிழ் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். கொரோனா காலகட்டம் பல துறைகளைப் போன்று சினிமாவையும் முடக்கிப் போட்டது.
வருவாய் இல்லாததால் நடிகர் நடிகைகள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் சினிமாவின் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களுக்கு 30 முதல் 40 விழுக்காடு வரை சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்கே செல்வமணியிடம் இது தொடர்பான கோரிக்கையை தொழிலாளர் சங்கங்கள் முன்வைத்துள்ளன. தயாரிப்பாளர்கள் திண்டாடி வரும் நிலையில் சம்பள உயர்வு சாத்தியமில்லை என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய சூழலில் அதிக லாபம் தரும் நடிகர் விஜயின் படத்தையே ஏற்கனவே ஒப்பந்தம் செய்து வெளியிட வினியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
இந்த நிலையில் சம்பள உயர்வு கேட்பது மனசாட்சியற்ற செயல் என்று கூறுகிறார்கள் தயாரிப்பாளர்கள். சமீபத்தில் தொழிலாளர்களின் சம்பளத்தை குறைப்பது அல்லது கூடுதலாக 4 மணி நேரம் வேலை செய்ய வைப்பது குறித்து பிலிம் சேம்பரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி தயாரிப்பாளர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது.
இதில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவே பெப்சி தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்பதாக கூறப்படுகிறது. திரைப்படங்களின் மூலம் நடிகர்களும், தொழிலாளர்களும் மட்டுமே லாபம் அடைவதாகவும் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களில் 98 விழுக்காட்டினர் இழப்பையை சந்திப்பதாகவும் தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
எனவே இந்த இக்கட்டான நிலையில் திரைத்துறையினர் அனைவரும் தங்கள் முடிவுகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இருப்பினும் சம்பள உயர்வு குறித்து அவர்கள் ஆலோசிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.






