மார்ச் 4-ல் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை..!
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி மார்ச் மாதம் இரண்டு முறை தமிழ்நாடு வருகிறார். இதில், சென்னை நந்தனத்தில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதில், தமிழ்நாட்டில் தனி அணியாக போட்டியிடும் வகையில் அரசியல் கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. பாஜகவை வலுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடியும் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்று பேசினார்.
முதல் நாள் பயணத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இரண்டாம் நாளில் தூத்துக்குடி மற்றும் நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
அத்துடன், முடிவுற்ற பணிகளை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். இந்நிலையில், பிரதமர் மோடி மார்ச் மாதம் இரண்டு முறை தமிழ்நாடு வர உள்ளார். இதில், மார்ச் 4 ஆம் தேதி தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அதன் தொடர்ச்சியாக சென்னை நந்தனத்தில் மாலை 5.15 மணிக்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திலும் உரையாற்ற உள்ளார். மேலும், மார்ச் மாத மத்தியிலும் பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் மாவட்டத்தில் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் இந்த பயணத் திட்டம் இருக்கும் என்று தெரிகிறது.
இதனிடையே, பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நாராயணன் திருப்பதி, லலிதா குமாரமங்கலம் உள்ளிட்டோர் நாளை டெல்லி செல்ல உள்ளனர். அங்கு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பி.எல். சந்தோஷ் ஆகியோரை சந்தித்து நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.





