அதிமுகவுடன் கூட்டணி முறித்த பாமக! தனியே வேட்பாளர்களை அறிவித்ததால் பரபரப்பு!
அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக புதுச்சேரி பாமக அறிவித்துள்ளதோடு, 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் அது வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் ஏப்ரல் 6ம் தேதியன்று, புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆனால் தமிழகத்தை போல் அல்லாமல், அங்கு கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. இதனால் கூட்டணியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு, கட்சிகள் ஆளாளுக்கு இஷ்டம் போல் களமிறங்கி உள்ளன.
தமிழகத்தில் அதிமுக – பாஜக இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இடம் பெற்றுள்ளது. புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக்கூட்டணிக்கு முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர் காங்கிரஸ்தான் தலைமை வகிக்கிறது. தேசிய ஜனநாயகக்கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
எஞ்சியுள்ள 14 சட்டமன்றத் தொகுதிகளைப் பிரித்துக் கொள்வதில் பாஜக, அதிமுக மற்றும் பாமக இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி ஏற்பட்டது. இறுதியில் பாமகவிற்கு எந்த ஒரு தொகுதியையும் வழங்காமல், பாஜக, அதிமுகவே எஞ்சிய தொகுதிகளை பகிர்ந்து கொண்டன.
இதனால் அதிருப்தியடைந்த பாமக, புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த பாமக, 15 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக தெரிவித்துள்ளது. மேலும், முதற்கட்டமாக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் அறிவித்துள்ளது.
வேட்பாளர்கள் பட்டியல்:-
மண்ணாடிப்பட்டு – வெங்கடேசன்
அரியாங்குப்பம் – சிவராமன்
மங்கலம் – மதியழகன்
தட்டாஞ்சாவடி – கதிர்வேல்
லாஸ்பேட்டை – நரசிம்மன்
மணவெளி – கணபதி
இந்திராநகர் – வடிவேல்
ஊசுடு – கலியபெருமாள்
திருபுவனை – சாண்டில்யன்






