--- --:--:-- --

30ம் தேதி தாராபுரம் வரும் மோடி… பிரசார கூட்டத்திற்கு ஏற்பாடுகள் தீவிரம்!

Modi CBE 01

பாஜக – அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வதற்காக, வரும் 30ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தாராபுரம் வருகிறார்.

 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் பா.ஜ.க. சார்பில் அதன் மாநிலத்தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவரையும், திருப்பூர், கோவை, கரூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா மற்றும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரதமர் மோடி பிரசாரம் செய்யவுள்ளார்.

 

இதற்காக வரும் 30ம் தேதி செவ்வாய்க்கிழமை, பிரதமர் மோடி தாராபுரத்திற்கு வருகை தருகிறார். இதற்கான பிரசார பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாராபுரத்தில், உடுமலைரோடு ஜீவா காலனி பகுதியில், 63 ஏக்கர் இடத்தில் பொதுக்கூட்டத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பிரசார கூட்டம் நடைபெறும் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அப்பகுதி சமதளமாக்கப்பட்டு வருகிறது.

 

பிரதமரின் வருகையை ஒட்டி, பாதுகாப்பு அதிகாரிகள் டெல்லியில் இருந்து தாராபுரத்திற்கு வந்து பார்வையிட உள்ளனர். இதேபோல், பிரதமர் வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

 

பிரதமரின் பயண ஏற்பாடுகள் குறித்து பாஜக வேட்பாளர் எல்.முருகன் கூறுகையில், சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க, பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 30ம் தேதி தாராபுரம் வருகிறார். இது இருகட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பிரதமரின் வருகை, வெற்றி வாய்ப்பை மேலும் அதிகரிக்கும் என்றார்.

Leave a Reply

Right Menu Icon