புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட்..!
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறக்கூடும் என்பதால், புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. நவம்பர் 28, முதல் டிசம்பர் 1 வரை மிக கன மற்றும் அதி தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அறிவுறுத்தியுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த எச்சரிக்கை குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, வங்கக்கடலில் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது நவம்பர் 28, முதல் டிசம்பர் 1 காலக்கட்டத்தில், புயலாக வலுப்பெறக்கூடும். இந்த புயலானது புதுச்சேரி கடற்கரைக்கு இணையாக நகர்ந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிக கனமழை முதல் அதி தீவிர மழை வரை பெய்யக்கூடும். மழையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.





