மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 33 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி எம்.எல்.ஏ.அம்மன் அர்ஜூனன் தலைமையில் கோவையில் அதிமுகவினர் ஊர்வலமாக சென்று அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை !!!
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 33ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழகத்தில் அதிமுக-வினர் அவரது திருவுருவச் சிலை மற்றும் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து,மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவையில் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தலைமையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் திரண்டு,கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையிலிருந்து அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை சந்திப்பு வரை அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆரின் திருவுருவப் படத்தை கை வண்டியில் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
பின்னர்,அவிநாசி சாலையில் உள்ள மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர்,அண்ணா மற்றும் ஜெயலலிதா ஆகியோரது திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்தும்,மலர் தூவி மரியாதை செலுத்திய அதிமுக தொண்டர்கள் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.






