--- --:--:-- --

கோட்டைவிட்ட ஓ.பி.எஸ்..கொத்திக் கொண்ட திமுக! டெல்டா சிங்கம் திமுகவில் ஐக்கியம்!

sgd

ஞ்சாவூர் என்றாலே நினைவுக்கு வரும் அரசியல் முகங்களில் ஒருவரான ஆர். வைத்திலிங்கம், இன்று (ஜனவரி 21) அண்ணா அறிவாலயத்தின் வாசலில் காலடி எடுத்து வைத்தது, தமிழக அரசியலில் மற்றொரு திருப்பமாக பார்க்கப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் ‘நிழல்’ போல இருந்தவர்கள், இப்போது ‘சூரியன்’ வெளிச்சத்தைத் தேடித் தஞ்சமடைந்துள்ளனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, ஒரு மாற்று சக்தியாகத் தங்களைக் காட்டிக்கொள்ளப் போராடிய ஓ.பி.எஸ் அணி, இன்று கிட்டத்தட்ட ‘காலியான கூடாரமாக’ மாறியிருக்கிறது.

டெல்டா அரசியலில் ஒரு சூறாவளி!

வைத்திலிங்கம் – இந்த ஒரு பெயர் தஞ்சை மற்றும் டெல்டா மாவட்ட அ.தி.மு.க-வினருக்குப் பலமான அடையாளம். 2011-16 காலகட்டத்தில் அமைச்சராக வலம் வந்தவர், ஜெயலலிதாவால் ‘ஐவர் குழு’வில் ஒருவராக மதிக்கப்பட்டவர். இபிஎஸ்-ஓபிஎஸ் மோதல் வெடித்தபோது, எடப்பாடியின் ஆளுமையை ஏற்க முடியாமல் ஓபிஎஸ் பக்கம் நின்றார். ஆனால், காலம் அவருக்குக் கொடுத்த பரிசு ‘நீக்கம்’.

 

இதையடுத்து, உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் ஊர் ஊராகச் சுற்றியும், எடப்பாடி போட்ட ‘எண்ட் கார்டை’ அழிக்க முடியவில்லை. இப்போது 2026 தேர்தல் நெருங்கும் வேளையில், தனித்து நின்றால் தத்தளிக்க நேரிடும் என்பதை உணர்ந்த வைத்திலிங்கம், புத்திசாலித்தனமாக உதயசூரியனை நோக்கி நடைபோட்டுவிட்டார்.

 

​திமுகவில் இணைவதற்கு முன்பாக, இன்று காலை சென்னை கோட்டைக்கு சென்ற வைத்திலிங்கம், சபாநாயகர் அப்பாவுவைச் சந்தித்து தனது ஒரத்தநாடு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததார். இதன் மூலம், ‘தான் ஒரு தார்மீக அரசியல்வாதி’ என்ற பிம்பத்தை அவர் நிலைநிறுத்த முயன்றிருக்கிறார். ஏற்கனவே மனோஜ் பாண்டியன் ராஜினாமா செய்த நிலையில், இப்போது வைத்திலிங்கமும் வெளியேறியிருப்பது ஓபிஎஸ் அணிக்கு விழுந்த பேரிடி.

​ஏன் இந்த அணி மாற்றம்? திரைமறைவுத் திட்டங்கள்!

வைத்திலிங்கம் ஏன் திடீரென திமுகவில் இணைந்தார் என்று, குற்றம் குற்றமே தரப்பில், அறிவாலய வட்டாரங்களில் விசாரித்தோம். அப்போது சில சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன. தஞ்சை மாவட்டத்தில் திமுக வலுவாக இருந்தாலும், அங்கிருக்கும் செல்வாக்கு மிக்க சமூக வாக்குகளை மொத்தமாக அள்ள ஒரு ‘பலம்’ தேவைப்பட்டது. வைத்திலிங்கத்தை உள்ளே இழுப்பதன் மூலம் அந்த வெற்றிடத்தை நிரப்ப ஸ்டாலின் திட்டமிட்டு காய்களை நகர்ட்தினார்.

அதேநேரம், தவெக தலைவர் விஜய் பக்கம் செல்லவும் வைத்திலிங்கத்திற்கு அழைப்புகள் வந்தனவாம். சமீபத்தில் அதிமுகவில் இருந்து பிரிந்து தவெக-வில் இணைந்த செங்கோட்டையன், ‘பத்து தொகுதிகளை உங்கள் கட்டுப்பாட்டில் தருகிறோம், இங்கே வாருங்கள்’ எனத் தூது விட்டதாகப் பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், ‘நிச்சயமில்லாத எதிர்காலத்தை விட, நிச்சயமான அதிகாரம் மேல்’ என முடிவெடுத்த வைத்திலிங்கம், திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற கணிப்பில் அறிவாலயத்தை நோக்கி நகர்ந்துவிட்டார்.

 

திமுகவில் இணைந்த பின்பு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அளித்த பேட்டியில், “அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படுவது சிறந்ததாக இல்லை. முதலமைச்சரின் செயல் பாட்டை தமிழக மக்கள் போற்றுகிறார்கள் மக்களின் மனதில் தமிழ்நாடு முதல்வர் இருக்கிறார். இதனால் திமுகவில் இணைந்துள்ளேன்.

 

அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை சர்வாதிகாரமாக செயல்படுகிறது. திமுக தான் தாய் கழகம். என்னை தனிப்பட்ட முறையில் அதிமுகவுக்கு சேர அழைத்தார்கள் நான் சேர தயாராக இல்லை” என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.

வெல்லமண்டி முதல் குன்னம் வரை…

வைத்திலிங்கம் மட்டுமின்றி, திருச்சி மாவட்டத்தின் முக்கிய முகமான அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் குன்னம் ராமச்சந்திரன் ஆகியோரும் திமுகவில் ஐக்கியமாகி உள்ளனர். இதன் மூலம் திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் அ.தி.மு.க-வின் பழைய வாக்கு வங்கியைச் சிதைக்கத் திமுக கச்சிதமாகக் காய் நகர்த்தியுள்ளது. ஓபிஎஸ்-ஸை நம்பி அரசியலில் இனி ஒன்றும் செய்ய முடியாது என்கிற எதார்த்தமே இவர்களை இந்த முடிவை எடுக்கத் தூண்டியிருக்கிறது.

தனித்து விடப்பட்ட பன்னீர்! அடுத்தது தாமரை?

ஒரு காலத்தில் ஜெயலலிதாவால் மூன்று முறை முதல்வர் நாற்காலியில் அமர்த்தப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், இன்று தன் அணியின் முக்கிய தளபதிகளை ஒவ்வொன்றாக இழந்துவிட்டுத் தனி மரமாக நிற்கிறார். சட்டமன்றத்தில் இவருடன் இருந்த 4 எம்.எல்.ஏ-க்களில் இப்போது மிஞ்சியிருப்பது ஐயப்பன் மட்டுமே.

 

​தற்போதைய சூழலில், ஓபிஎஸ்-ஸுக்கு இருக்கும் ஒரே பிடிமானம் பாஜக மட்டுமே. வரும் 23-ம் தேதி செங்கல்பட்டில் நடைபெறவிருக்கும் பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில், ஓபிஎஸ் முறைப்படி பாஜகவில் இணையப்போவதாகத் தகவல்கள் தீயாய்ப் பரவுகின்றன. ‘அதிமுகவின் அடையாளம்’ என்ற போர்வை இனி செல்லாது என்பதால், தேசியக் கட்சியின் நிழலில் ஒதுங்க அவர் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.


முடிவற்ற குழப்பம்… தெளிவான இலக்கு!

தமிழக அரசியல் களம் 2026-ஐ நோக்கி ஒரு பெரும் சுழலில் சிக்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஒருபுறம், ஆளுங்கட்சியான திமுக மறுபுறம், விஜய்யின் தவெக மூன்றாவது முனையாக உருவெடுத்துள்ளது. இந்த மும்முனைப் போட்டியில், செல்வாக்கு மிக்க மாஜிக்களை வளைப்பதில் திமுக முந்திக்கொண்டிருக்கிறது. வைத்திலிங்கம் போன்றவர்களின் வருகை டெல்டாவில் திமுகவை மேலும் பலப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

ஆனால், தன் வாழ்நாள் முழுவதும் எடப்பாடியை எதிர்ப்பதையே நோக்கமாகக் கொண்ட ஓபிஎஸ், பாஜகவில் இணைவதன் மூலம் தனது அரசியல் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தைத் தக்கவைத்துக் கொள்வாரா? அல்லது மற்றுமொரு ‘துணை’யாகவே முடிந்துவிடுவாரா? என்பதை ஜனவரி 23-ம் தேதி மோடி மேடை தீர்மானிக்கும்!


 

Leave a Reply

Right Menu Icon