நிவின் பாலி மீதான பண மோசடி வழக்கு.. விசாரணைக்கு தடை விதித்தது கேரள உயர்நீதிமன்றம்!
மலையாள நடிகர் நிவின் பாலி மீதான பண மோசடி வழக்கு விசாரணைக்கு தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் நிவின் பாலி ‘மகாவீர்யர்’ என்ற படத்தை தயாரித்து, நடித்தார். 2022 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் நஷ்டத்தை சந்தித்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் ஷம்நாஸ், நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் எப்ரிட் ஷைன் ஆகியோருக்கு எதிராக வைக்கம் நீதிமன்றத்தில் பணமோசடி வழக்கு தொடர்ந்தார்.
அதில், ’ஆக்ஷன் ஹீரோ பைஜூ’ என்ற படத்தின் வெளிநாட்டு உரிமைக்காக தான் 1 கோடியே 90 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும், தனக்குத் தெரியாமல் படத்தின் உரிமையை நிவின் பாலியும், இயக்குநர் எப்ரிட் ஷைனும் சேர்ந்து வேறு ஒருவருக்கு 5 கோடிக்கு விற்று விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் எப்ரிட் ஷைன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை எதிர்த்து நிவின் பாலி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நிவின் பாலி மீதான பண மோசடி வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





