--- --:--:-- --

ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு எவ்வளவு..?

9

மிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் புதிதாக நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு பணியில் சேர்ந்த ஒரு வருடம் மட்டும் ஓராண்டு வரை விற்பனையாளர்களுக்கு ரூ.7,500-ம், கட்டுனர்களுக்கு ரூ.6,600-ம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

 

ஓராண்டு பணி முடித்தவர்களில் விற்பனையாளர்களுக்கு ரூ.9,900 முதல் ரூ.39,600 வரையும் கட்டுனர்களுக்கு ரூ.9,000 முதல் ரூ.35,000 வரையிலும் புதிய ஊதியக்கற்றையில் கால முறை ஊதியம் வழங்கப்படும். பணியில் சேர்ந்த ஓராண்டுக்கு பிறகு கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு ரூ.9,900 முதல் ரூ.39,600 வரையும் கட்டுனர்களுக்கு ரூ.9,000 முதல் ரூ.35,000 வரையிலும் புதிய ஊதியக் கற்றையில் கால முறை ஊதியம் வழங்கப்படும்.

 

ஓராண்டு பணி முடித்த விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு முந்தைய ஊதிய கற்றையில் தற்போது பெற்று வரும் அடிப்படை ஊதியத்தை கணக்கில் கொண்டு அதற்கு 15% சேர்த்து வரும் கூடுதல் தொகையினை அடுத்த 10 ரூபாய்க்கு முழுமையாக்கி அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படும்.

 

புதிதாக நிர்ணயிக்கப்பட கூடிய அடிப்படை ஊதியத்தில் 55% அகவிலைப்படி பெற அனுமதிக்கப்படுகிறது. பின்னர் அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது அரசு அறிவிக்கும் அகவிலைப்படி உயர்வு இப்பணியாளர்களுக்கும் பின்பற்றப்படும். தற்போது நடைமுறையில் உள்ள 3% ஆண்டு ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும்.

 

அடிப்படை ஊதியத்தில் 10% அல்லது சென்னை மாநகராட்சிக்குள் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு முறையே ரூ.1,500 மற்றும் ரூ.1,200 இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும். இதர பகுதிகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு முறையே ரூ.1,200 மற்றும் ரூ.1000 இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும்.

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடிப்படை ஊதியத்தில் 5% அல்லது சென்னை மாநகராட்சிக்குள் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு முறையே ரூ.700 மற்றும் ரூ.600 இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும். இதர பகுதிகளில் அடிப்படையில் ஊதியத்தில் 4% அல்லது முறையே ரூ.600 மற்றும் ரூ.500 இவற்றில் எது குறைவோ வழங்கப்படும். 1000 மற்றும் அதற்கு கீழ் குடும்ப அட்டைகள் உள்ள விற்பனையாளர்கள் ரூ.1,500, கட்டுனர்களுக்கு ரூ.1000 நியாயவிலைக்கடை படி வழங்கப்படும்.

 

1001 குடும்ப அட்டைகள் முதல் 1,500 குடும்ப அட்டைகள் உள்ள விற்பனையாளர்கள் ரூ.1,750, கட்டுனர்களுக்கு ரூ.1,250 நியாயவிலைக் கடை படி வழங்கப்படும். 1501 மற்றும் அதற்கு மேல் குடும்ப அட்டைகள் உள்ள விற்பனையாளர்கள் ரூ.2000, கட்டுனர்களுக்கு ரூ.1,500 நியாயவிலைக்கடை படி வழங்கப்படும். விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு முறையே ரூ.300 மருத்துவப்படி வழங்கப்படும்.

 

மலைவாழ் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு மலைவாழ்படி மாதம் ஒன்றுக்கு அடிப்படை ஊதியத்தில் 20% அல்லது அதிகபட்சம் மாதம் ஒன்றுக்கு ரூ.1,500 வழங்கப்படும். சராசரி கடல் மட்டத்தில் மலைவாழ்விட உயரம் 1000 மீ.மேல் உள்ள பகுதிகளில் குளிர்காலபடி மாதம் ஒன்றுக்கு ரூ.400 வழங்கப்படும். இது குளிர் காலங்களில் மட்டும் வழங்கப்படும்.

 

மாற்றுத் திறனாளிகளுக்கான போக்குவரத்துபடி தற்போது உள்ளவாறு ரூ.2,500 வழங்கப்படும். ஒரே பதவியில் 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு தேர்வு நிலையும், 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலையும் வழங்கி தலா ஒரு ஊதிய உயர்வு (3%) வழங்கப்படும். ஒரே பதவியில் 30 ஆண்டுகள் பணி முடித்த பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதிய உயர்வாக (3 சதவீதம்) ஒரு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Right Menu Icon