--- --:--:-- --

பகலில் ” ஹோட்டல் தொழில் ” இரவில் கொள்ளை தொழில் “.கொள்ளை கும்பலை சுற்றி வளைத்த போலீஸ். 2 கோடி ரூபாய் மதிப்பிலான 11 சொகுசு கார்கள் மீட்பு !!!

13

கல் நேரத்தில் ஹோட்டல் நடத்தி விட்டு இரவு நேரத்தில் சொகுசு கார்களை குறிவைத்து திருடும் கும்பலை மதுக்கரை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.கோவை மதுக்கரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரித்தீஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். சீரபாளையம் ஆப்பிள் கார்டன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது சந்தேகத்திற்கிடமான வகையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. ரோந்து பணியில் உடன் இருந்த போலீசார் இறங்கிச் சென்று காரில் உள்ள வாலிபர்களை யார் என விசாரிக்க துவங்கினர்.

 

அப்போது,அங்கிருந்து 3 வாலிபர்கள் தப்பி ஓடினர். மேலும்,காரில் இருந்த 3 வாலிபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து அழைத்து வந்து போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முதலில் பொழுதுபோக்கிற்காக மது அருந்துவதற்காக வந்து இருந்ததாக கூறினர்.

 

ஆனால், அவர்கள் வந்திருந்த கார் திருட்டு கார் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தங்கள் கொள்ளையடிக்க திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக நண்பர்களுடன் காத்திருந்த பொழுது போலீசாரிடம் மாட்டிக் கொண்டதாக தெரிவித்தனர்.

 

தொடர்ந்து அவர்களிடம் இன்று காலை இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது,பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. பிடிபட்ட 3 நபர்களும் நண்பர்கள் என்பதும்,அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் குலசேகர நல்லூர் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் சுரேந்திரன்(23), தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாதவன் என்பவரின் மகன் சக்தி(22), திருநெல்வேலி நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் விஜயராஜ்(23) என்பதும் தெரியவந்தது.மேலும், இவர்கள் மூன்று பேரும் தினேஷ் என்பவருடன் இணைந்து மதுக்கரை மார்க்கெட் பகுதியில் டி.என்.99 என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வந்திருக்கின்றனர்.

 

மேலும்,இவர்களது ஹோட்டலின் அருகில் ஷைன் ஆட்டோ கேரேஜ் என்ற பெயரில் ஆட்டோ ஒர்க் ஷாப்  சாதிக் மற்றும் இம்ரான் என்ற இருவர் நடத்தி வந்திருக்கின்றனர். அனைவருக்கும் போதுமான அளவு வருமானம் இல்லாத காரணத்தால் கொள்ளையடிக்க திட்டமிட்டனர். இதையடுத்து சாதிக் மற்றும் இம்ரான் கொடுத்த திட்டத்தின் பெயரில் சொகுசு கார்களை குறிவைத்து திருடத் துவங்கினர்.

 

இதன்படி கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தனியாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்களை திருட துவங்கினர்.இதில் குறைந்த விலை கார்களை திருடுவதை விட விலை உயர்ந்த கார்கள் திருடினால் உதிரிபாகங்கள் விற்பதற்கோ அல்லது நம்பர் பிளேட்டை மாற்றி விட்டு விற்பதற்கு செளகரியமாக இருக்கும் என திட்டமிட்டு ஆடி கார் முதல் விலை உயர்ந்த சொகுசு கார்களை மட்டும் இந்த கும்பல் குறி வைத்து திருடி வந்தனர்.

 

தொடர்ந்து நேற்று இரவு கார் திருட புறப்படும் பொழுது போலீசாரிடம் மாட்டிக் கொண்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மதுக்கரை போலீசார் கார் திருட்டு கும்பலின் தலைவன் சுரேந்திரன் மற்றும் அவனது கூட்டாளிகள் விஜயராஜ்,சக்தி ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்பிலான 11 கார்கள் மீட்கப்பட்டது.

 

தொடர்ந்து தப்பிச்சென்ற சாதிக்,  இம்ரான், தினேஷ் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோவை நகரில் பகலில் ஹோட்டல் நடத்தி விட்டு இரவில் கார் திருடும் கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon