அரசியலுக்கு வந்தால் வென்றிருப்பேன்.. விஜய் மீது பொறாமையா…? – ரஜினிகாந்த் விளக்கம்
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள போயஸ் கார்டன் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் முடிவுகள் வந்ததும் நான் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்று பார்த்தேன். அது விமர்சனத்துக்கு உள்ளானது. அவர் என்னுடைய 40 ஆண்டுகால நண்பர். எங்கள் நட்பும், கொள்கையும் அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி சகஜம். இருந்தாலும், ஸ்டாலின் கொளத்தூரில் தோற்றது எனக்கு சங்கடம். அதற்காக ஒரு நண்பர் என்ற முறையில் அவரை நான் பார்த்தேன்.
அதற்காக நான் விஜய் சிஎம் ஆக கூடாது என்பதற்காக நான் அவரை சந்தித்தேன் என்றெல்லாம் விமர்சித்தார்கள். அப்படியான தரம் கேட்ட நபர் ரஜினிகாந்த் அல்ல. விஜய் வெற்றி பெற்றதும் எக்ஸ் தளத்தில் என்னுடைய வாழ்த்துகளை பதிவிட்டேன். விமான நிலையத்தில் விஜய் குறித்த கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை என்கிறார்கள்.
விஜய் மீது எனக்கு பொறாமை என்கிறார்கள். நான் அரசியலில் இல்லை என விலகி இருக்கிறேன். அரசியலில் நான் இல்லாதபோது எனக்கு ஏன் விஜய் மீது பொறாமை? ஒருவேளை கமல் முதல்வராக இருந்திருந்தால் எனக்கு பொறாமை இருந்திருக்கலாம். ஆனால் அப்பவும் இருக்காது. கிடைக்குறது கிடைக்காம இருக்காது. கிடைக்காமல் இருப்பது கிடைக்காது.
எனக்கும் விஜய்க்கும் ஒரு தலைமுறை இடைவெளி. கிட்டத்தட்ட 25 ஆண்டுகால இடைவெளி. அதனால் தான் நான் ஏற்கனவே சொன்னேன் விஜய் என்னுடன் போட்டியிட்டால் எனக்கும் நல்லதல்ல, அவருக்கும் நல்லதல்ல. சிறு வயதிலிருந்து நான் அவரை பார்த்துக்கொண்டிருக்கிறேன். விஜய் முதல்வர் ஆனது எனக்கு என்ன பொறாமை?
விஜய் சிறிய வயதில் முதல்வர் ஆகியிருக்கிறார். 2 பெரிய கட்சிகளை எதிர்த்து தனி ஆளாக வென்றிருக்கிறார் விஜய். அது எனக்கு பொறாமை இல்லை. ஆச்சரியம் கலந்த சந்தோஷம். விஜய்யிடம் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உண்டு. அதை அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்.
நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று அப்போது 3 பக்கத்துக்கு அறிக்கை விட்டேன். அரசியல் வேறு சினிமா வேறு. உடல்நலன் சரியில்லை என்றாலும் நடிக்கலாம். அது தயாரிப்பாளர் போட்ட பணம். அதற்காக நடித்து ஆக வேண்டும். சம்பிரதாயத்துக்காக விஜயை சந்திப்பு எனக்கு பிடிக்காது. விஜயை மக்கள் 2 வருடம் விட்டுவிட வேண்டும். எந்த தொந்தரவும் செய்ய கூடாது. தவெக தொண்டர்கள் எதுவும் செய்தால் அது விஜயை தான் நேரடியாக பாதிக்கும்.
60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்தார்கள். அதன் மூலம் விஜய் முதல்வராகியுள்ளார். முதல்வர் பதவி ஏற்பு விழாவில் நான் எதிலும் கலந்துகொண்டது இல்லை. கருணாநிதி இருக்கும்போதே முதல்வர் பதவி ஏற்பு விழாவில் நான் கலந்துகொண்டது கிடையாது. அரசியலுக்கு வந்திருந்தால் வெற்றி பெற்றிருப்பேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை.” என்றார்.





