தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்கள் மீது குண்டாஸ்..!
சுதந்திர தினத்தை ஒட்டி தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் காலை வழக்குகளை விசாரிக்கத் துவங்கும் முன், சுதந்திர தினத்தை ஒட்டி குடியிருப்பு நல சங்கத்தில் கொடியேற்றுவதை முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும், அதை நாளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென வழக்கறிஞர் முறையீடு செய்தார்.
அப்போது, தேசிய கொடி ஏற்ற போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதி, சுதந்திர தினத்தை ஒட்டி தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
தேசியக் கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம் எனவும், கொடி ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது. தடுப்போர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடரலாம் எனவும் தெரிவித்தார்.





