இந்தியா – நியூசிலாந்து இடையேயான நட்புறவு வலுப்பட்டுள்ளது – பிரதமர் மோடி
பிரதமர் மோடி தனது மூன்று நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தின் இறுதிப் பகுதியாக நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகருக்கு சென்றிருக்கிறார். தனது நியூசிலாந்து பயணத்தின் இரண்டாம் நாளான இன்று, அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனுடன் தூதுக்குழு அளவிலான சந்திப்பை நிகழ்த்தி உள்ளார் இந்தியப் பிரதமர் மோடி. கடந்த 40 ஆண்டுகளில் ஒரு இந்தியப் பிரதமர் நியூசிலாந்துக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தின் போது, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் அவர்கள் விமான நிலையத்திற்கே நேரடியாக வந்து பிரதமர் மோடியை அன்புடன் கட்டித்தழுவி, சிவப்பு கம்பள மரியாதையுடன் வரவேற்றார். மேலும், பிரதமர் மோடியின் வருகையைக் கொண்டாடும் விதமாக, ஆக்லாந்தின் புகழ்பெற்ற ‘ஸ்கை டவர்’ கோபுரம் இந்திய தேசியக் கொடியின் மூவண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து இச்சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உதவியதற்காக பிரதமர் லக்ஸனுக்கும் நியூசிலாந்து மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் புதிய ஆற்றலைச் செலுத்தும் ஒரு “வரலாற்று மைல்கல்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் பேசுகையில், “நீங்கள் (நியூசி. பிரதமர்) இந்தியாவுக்கு வருகை தந்தபோதுதான் தடையற்ற வர்த்தக ஒப்பந்தச் செயல்முறை தொடங்கப்பட்டிருந்தது. இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த ஒப்பந்தத்தை நனவாக்குவதற்காக எங்களுடன் (இந்தியாவுடன்) நியூசிலாந்து ஒன்றிணைந்து செயல்பட்ட விதம், மிகவும் சிறப்பானது. கடல்சார் நாடுகளான இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான இந்த ஒத்துழைப்பு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டும் முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும்” என்றார்.





