திடீரென எல்லையை மூடிய பிரான்ஸ்..! 100 கி.மீ தொலைவில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்..!
இங்கிலாந்தில் இருந்து புதிய வகை கொரொனா வைரஸ் பரவி விடும் என்பதால் பிரான்ஸ் தனது எல்லையை மூடி உள்ளது. இங்கிலாந்திலிருந்து பிரான்ஸ் வரும் சரக்கு வாகன ஓட்டிகள் ஒவ்வொருவரும் பரிசோதனை மேற்கொண்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
100 கிலோ மீட்டருக்கு மேலே சரக்கு வாகனங்கள் வரிசைகட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தங்களது வீடுகளுக்கு செல்ல நினைத்த வாகன ஓட்டிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கொரொனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்து விட்டதால் கடந்த ஒரு வருட காலமாக முடங்கிக் கிடக்கும் உலகம் 2021 ஆம் ஆண்டில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்ற நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது பிரிட்டனில் இருந்து வந்திருக்கும் செய்தி.
பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரொனா வைரஸ் 70% அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் பிரிட்டனில் கடந்த சில தினங்களாக ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் பேருக்கு மேல் கொரொனா வைரஸ் பரவி வருகிறது.
இதனால் அச்சமடைந்த ஐரோப்பிய நாடுகளும் மற்றும் உலக நாடுகள் பலவும் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை துண்டித்து உள்ளன. புதிய வீரியமிக்க கொரொனா வைரஸ் தங்கள் நாட்டுக்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில் பிரான்ஸ் தமது எல்லையை மூடி உள்ளது.
இங்கிலாந்தில் இருந்து வரும் ஒவ்வொரு சரக்கு வாகன ஓட்டிகளும் கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகு முடிவு நெகட்டிவ் என்று வந்தால் மட்டுமே பிரான்சுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.






