ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி கணவனை கொல்ல முயன்ற மனைவி உட்பட 4 பேர் கைது
அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி மெக்கானிக்கை கொல்ல முயன்ற வழக்கில் மனைவி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆவடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் அம்பத்தூரில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி அஸ்வினிக்கும் அவரது நண்பர் அனுராக் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை ராஜேந்திரன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஸ்வினி தனது கள்ளக்காதலன் அனுராக் மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து திருத்தணிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த ராஜேந்திரனை கீழே தள்ளி விட்டுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார் கொலை முயற்சியில் ஈடுபட்ட அஸ்வினி அனுராக் மற்றும் அவரது நண்பர்கள் கமலேஸ்வரன், தினேஷ் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






