கூட்டணிக் கட்சிகளை ஈபிஎஸ் தான் முடிவு செய்வார் – ஓபிஎஸ்
2026-ல் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவோம், கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவு செய்ய அவருக்கே முழு அதிகாரம் இருப்பதாகவும் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி செயற்குழு மற்றும் பொதுக்குழுவை வழிநடத்துவார் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில், 16 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, திமுகவை வீழ்த்துவதற்கு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு பொதுக்குழு முழுமனதுடன் ஒப்புதல் அளிப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் ஈபிஎஸ்-க்கு இருப்பதாக பொதுக்குழுவில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டணியின் நோக்கத்தை புரிந்துக் கொண்டு, அதன் தலைமையை ஏற்பவர்கள் மட்டுமே கூட்டணியில் இடம்பெற முடியும் என்றும் அதிமுக குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இணைவது குறித்தும் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்வார் என்று சூசமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2026-ல் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவோம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் ஈபிஎஸ் தான் என்பதும் மறைமுகமாக திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறைக்கே சவால் விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனப்பான்மைக்கு கண்டனம் என்றும் அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நீதித்துறையில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது என்றும், நீதித்துறையின் தனித்தன்மை காப்பாற்றப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. அதே சமயம், நீதித்துறை தொடர்பான தீர்மானத்தில் திருப்பரங்குன்றம் என்ற வார்த்தை இடம்பெறாததும் கவனிக்கத்தக்கது.
இந்நிலையில், கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ திட்ட ஒப்புதலுக்கான புள்ளி விவரங்களை முறையாக அனுப்பாத திமுக அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை வரவேற்பதாக கூறியுள்ள அதிமுக, முறைகேடான வாக்காளர் பட்டியல் மற்றும் தில்லு முல்லுகளை நீக்கி, தகுதியான வாக்காளர்களை கொண்ட பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




