மே.வங்கத்தில் மம்தா ஆட்சி! பாஜகவுக்கு அதிக இடங்கள்!! கருத்துக்கணிப்பில் தகவல்…
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் மம்தாவின் ஆட்சி அமையும் என்றும், எனினும் பாஜக வலுவான எதிர்க்கட்சியாக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுடன் அசாம், கேரளா, மேற்கு வங்க சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மேற்கு வங்கத்தில் வரும் 27 ம் தேதி, முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு மட்டும் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசு பதவியில் உள்ளது. அதனை அகற்ற வேண்டும் என்ற முனைப்புடன் பாரதிய ஜனதா கட்சி களமிறங்கி முழு முனைப்புடன் பணியாற்றி வருகிறது. பிற மாநிலங்களை காட்டிலும் பாஜகவின் குறி இந்த மாநிலம் மீதுதான் உள்ளது. இதனால், மேற்கு வங்கத் தேர்தல் முடிவு குறித்த எதிர்பார்ப்பு நாடு முழுவதும் உள்ளது.
இந்த நிலையில், டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில், மீண்டும் மம்தா பானர்ஜியே ஆட்சியை பிடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முந்தைய தேர்தலை காட்டிலும் குறைந்த இடங்களில்தான் அந்த கட்சி வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 160 இடங்களிலும், பாஜக இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயகக்கூட்டணி 112 இடங்களிலும், இடதுசாரி கூட்டணி கட்சிகள் 22 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





