சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல்..!
சிவகங்கை மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் அதிமுக கூட்டணி 8 இடங்களிலும், திமுக கூட்டணி 8 இடங்களிலும் வெற்றி பெற்று சமநிலையைப் பிடித்தன.
இதனையடுத்து கடந்த ஜனவரி 11 ஆம் தேதி முதல் கட்டமாக மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் சம பலத்தில் இருந்ததால் ஜனவரி 30ஆம் தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் தேர்தலை புறக்கணித்ததால், கொரோனாவால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதாலும் மூன்றாவது முறையாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் பொது முடக்க தளர்வுகள் படிப்படியாக அமல் ஆன நிலையில் தேர்தலை உடனடியாக நடத்த கோரி திமுகவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனர்.
இதை தொடர்ந்து இரு வாரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. அதனடிப்படையில் இன்று மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடக்க உள்ளது.







