“டெல்லி வன்முறை திட்டமிட்ட சதியே!” அமித் ஷா பதவி விலக வேண்டும்..! காங்கிரஸ் தலைவர் சோனியா ஆவேசம்!!
டெல்லியில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்றும், இதற்கு மத்திய அரசும் உள்துறை அமைச்சகமும் தான் பொறுப்பு எனவும் குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் வன்முறை வெடித்து தீப்பற்றி எரிகிறது. தொடர்ந்து 4 – வது நாளாக நடைபெற்று வரும் கலவரம், தீ வைப்பு சம்பவங்களால் வன்முறைக் களமாக காட்சியளிக்கிறது தலைநகர் டெல்லி . அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வருகையின் போது தலைநகரில் வெடித்துள்ள இந்த கலவரம் இப்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து, ஐ.நா சபையும் உன்னிப்பாக கவனிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த வன்முறைக்கு இதுவரை 20 பேர் பலியாகியுள்ள நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறுகிறது காவல்துறை . நிலைமை இந்த அளவுக்கு மோசமானதற்கு காரணம் கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் போன்ற பாஜக குட்டித் தலைவர்களின் தூண்டுதலே காரணம் எனவும் கூறப்படுகிறது.

இதனாலேயே ஆரம்பத்தில் பிரச்னையை சட்ட ரீதியில் கையாளாமல், வன்முறை வெடிக்கும் வரை காவல்துறை கைகட்டி மெத்தனம் காட்டியதாக உச்ச நீதிமன்றமே குட்டு வைத்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்றமும் வெறுப்பு பேச்சுகளை பேசி, கலவரத்துக்கு காரணமான கபில் மிஸ்ரா போன்ற பாஜகவினரை கைது செய்யாதது ஏன்? என சாட்டையை சுழற்றியதுடன் உடனடியாக கைது செய்யும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் டெல்லி வன்முறை குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கூடியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா, டெல்லியில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதில் முன்கூட்டியே திட்டமிட்ட சதிதான் காரணம். இதன் பின்னணியில் மத்திய அரசும், உள்துறை அமைச்சகமும் உள்ளன. இதனால் டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனே பதவி விலக வேண்டும் என சோனியா காந்தி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.






