மக்களவை அமளி குறித்து டி.ஆர்.பாலு விளக்கம்!
மக்களவையில் பட்டியலின அமைச்சரை அவமதித்துவிட்டதாக பாஜகவினர் சித்தரித்துப் பேசுவதாக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார். மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடரில் வெள்ள நிவாரணம் தொடர்பாக தி.மு.க கேள்வி எழுப்பியது. அப்போது தி.மு.க மற்றும் பா.ஜ.க எம்.பிக்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
டி.ஆர்.பாலு பேசியபோது அவரை குறுக்கிட்டு பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை, அமைச்சராக இருக்க தகுதியற்றவர் என அவர் கூறியதாக தெரிகிறது. இதனால் பட்டியலின அமைச்சரை டி.ஆர்.பாலு அவமதித்துவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. தொடர்ந்து அதற்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக, விளக்கமளித்துள்ள திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுவதாக தெரிவித்தார். “வெள்ள பாதிப்பு, நிவாரண நிதி குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பினேன், என்னை கேள்வி கேட்கவிடாமல் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறுக்கிட்டார்.
ஒரு தமிழர் என்ற முறையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செயல்படவில்லை. மக்களவையில் பட்டியலின அமைச்சரை அவமதித்துவிட்டதாக பாஜகவினர் சித்தரித்துப் பேசுகின்றனர்” என கூறினார். “தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்ற பதற்றத்தில் பிரதமர் மோடி செயல்படுகிறார். பிரதமர் நல்ல நண்பர், ஆனால் மக்களவையில் பிரதமரின் உரை வருத்தமளிக்கிறது.
பிரதமர் தன்னுடைய இமேஜை தாழ்த்தி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது. “இந்தியா” கூட்டணியை பார்த்து பாஜக பயத்தில் உள்ளது. பொது சிவில் சட்டத்தை “இந்தியா” கூட்டணியில் உள்ள 28 கட்சிகளும் எதிர்க்கும்” எனவும் அவர் தெரிவித்தார்.





