கோவை : கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு ரூ.1.60 லட்சம் வழங்கிய மாவட்ட காவல் துறையினரின் மனிதநேயம் !!!
கடந்த 9 மாதங்களாக கொரோனா வைரஸின் தாக்கத்தால் பல்வேறு தொழில்களும்,அன்றாட பிழைப்பும் போய் வருமானமும் இழந்து பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.இந்த காலகட்டங்களில் அரசியல் கட்சியினர்,தன்னார்வ அமைப்புகள் பொதுமக்களுக்கு அன்றாட தேவைகளான அரிசி,பருப்பு உட்பட பல்வேறு பொருட்களை நிவாரணமாக வழங்கினர்.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக மருத்துவர்கள்,செவிலியர்கள்,தூய்மைப்பணியாளர்களின் பங்கு அளப்பரியது.அதே நேரத்தில் காவல் துறையினரின் பங்கும் சிறப்பான முறையில் இருந்து வருகிறது.பணியின் போது காவல் துறையில் பலர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கோவை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்த பெண் காவலர் தங்கஇசக்கி கொரோனா தொற்று காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய குடும்பத்திற்கு உதவும் பொருட்டு கோவை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் முதல்நிலை காவலர் பாபு என்பவர் உதவும் கரங்கள் வாட்ஸ்ஆப் குழு மூலம் கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் மற்றும் கோவை மாவட்ட தாலூக்கா காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் மூலம் ரூபாய் 1,60,000/- நிதிதிரட்டினார்.
அப்பணத்தை பெண்காவலரை இழந்து வாடும் தங்கஇசக்கியின் பெற்றோர்கள் முத்துராஜ் – செந்தூரகனி தம்பதியினரிடம் கோவை எஸ்.பி.அருளரசு இன்று வழங்கினார். பணத்தைப் பெற்றுக்கொண்ட தங்கஇசக்கியின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண் காவலர் தங்கஇசக்கியின் குடும்பத்திற்கு ரூ.1.60 லட்சம் வழங்கிய கோவை மாவட்ட காவல் துறையினரின் மனிதநேயமிக்க இச்செயலுக்கு ஒரு ” ராயல் சல்யூட் “.







