கண்ணுக்கு தெரியாத காற்றில்கூட ஊழல் செய்த திமுக! பிரசாரத்தில் எடப்பாடி தாக்கு…
கண்ணுக்கு தெரியாக காற்றில் கூட ஊழல் செய்தது திமுக என்று, தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் பழனிச்சாமி கடுமையாக சாடினார்.
வரும் 8ம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இன்னமும் 18 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர்.
அவ்வகையில் திருவாருர், கூத்தாநல்லூர், பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் முதல்வர் பழனிச்சாமி பேசியதாவது: கோதாவரி- காவிரி இணைப்பு நடந்தே தீரும். அதற்கான நாங்கள் நிச்சயம் போராடுவோம். இந்தியாவிலேயே ஆளுமையில் சிறந்த மாநிலம் தமிழக மாநிலம்தான். குடிமராமத்து திட்டம் மூலம் குளம் ஏரி வாய்க்கால் முழுமையாக அ.தி.மு.க அரசின் மூலம் தூர்வாரப்பட்டு உள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு வாழ, மீண்டும் அதிமுகவை ஆட்சியில் அமர வைக்க வேண்டும்.
ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்தார். விவசாயிகளின் பாதிப்பை உணராமல் அவர்களது நிலங்களை பிடுங்கி தனியாரிடம் ஒப்படைக்க முற்பட்டார்கள். அப்போது, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றாமல் விவசாயிகள் பாதுகாக்கப்பட்டனர்.
விவசாயிகளின் நிலத்தை பறிக்க நினைத்தவர் மு.க.ஸ்டாலின். ஆனால், அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றியது இந்த பழனிசாமி. ஸ்டாலினுக்கு விவசாயிகளைப் பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் கவலை இல்லை. அவருக்கு விவசாயிகளின் ஓட்டு கிடைக்காது.
கடந்த 2010 காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அதன்பின், ஜெயலலிதா நீட் தேர்வை தடுக்க கடுமையான முயற்சி எடுத்தார். தற்போது, நீதிமன்ற உத்தரவின்பேரிலேயே நீட் தேர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு. நாட்டிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம், தி.மு.க. அரசுதான். கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தது திமுகதான் என்று, முதல்வர் பழனிச்சாமி பேசினார்.





