ஓட்டுப்பதிவின் போது வாக்காளர்களுக்கு கையுறை! தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்!!
கொரோனா தொற்று அபாயம் கருதி, தேர்தல் நாளன்று வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு தனித்தனியே கையுறை வழங்கப்படும என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி உள்பட ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், தமிழகம், புதுவை, கேரளாவில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தலுக்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால், ஆணையத்திற்கு தேர்தல் நடத்துவது ஒரு சவாலாகவே உள்ளது.
கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்கும் பணியில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆணையம் செய்து வருகிறது. தேர்தலில் முதல் கட்டமாக, மார்ச் 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் வர, 2 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதிவாகும் வாக்குகள், 76 மையங்களில் எண்ணப்படும். வாக்குச்சாவடிகள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும். தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் 1950 என்ற இலவச எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு அளிக்கலாம்.
கொரோனா பரவும் வாய்ப்பு உள்ளதால், தேர்தல் வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு தனித்தனியாக கையுறை வழங்கப்படும். வாக்களிக்கும்போது வாக்காளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.
வாக்களிக்க வரும் வாக்காளர்களின் உடல்வெப்பநிலை சோதிக்கப்படும். சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியிருக்கும் அளவில் உடல்வெப்பநிலை இருந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா பாதித்தவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் தற்பாதுகாப்பு உடையில் வந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.





