கொரோனா அதிகம் பாதித்த தமிழத்துக்கு குறைந்த நிதி ஒதுக்கீடு ஏன்? மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!!
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள தமிழகத்திற்கு குறைந்த நிதி ஒதுக்கீடு செய்தது ஏன் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. முதல் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்தி இருந்தது. ஆனால் மத்திய அரசோ தமிழகத்திற்கு 510 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள உ.பி. உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு அதிக நிதியையும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த பாரபட்சமான நிதி ஒதுக்கீடு நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தியாவில் கொரோனா பாதிப்பில் 2-வது மாநிலமாக திகழும் தமிழ் நாட்டுக்கு ரூ.510 கோடி மட்டும் ஒதுக்கிவிட்டு, கொரோணா பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 2 வாரத்தில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.






