பணப்பட்டுவாடா புகார்… துரைமுருகன், கே.என். நேரு மீது போலீசார் வழக்குப்பதிவு!
பணப்பட்டுவாடா வழக்கில் காட்பாடி தொகுதி வேட்பாளருமான துரைமுருகன் மீது, ஆபாசமாக பேசியத புகாரில் கே.என். நேரு மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. தேர்தல் பிரசாரம் ஓய்ந்துவிட்ட நிலையில், தேர்தல் ஆணையம் அதிக விழிப்புடன் கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், திமுக பொதுச்செயலாளரும் காட்பாடி தொகுதி வேட்பாளருமான துரைமுருகன் மீது பணப்பட்டுவாடா செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. காட்பாடி தொகுதிடில் பணம் விநியோகம் செய்யப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, பறக்கும் படையினர் அங்கு அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பணம் விநியோகம் செய்துக் கொண்டிருந்த திமுக பிரமுகர் கோபி என்பவர் கையும் களவுமாக சிக்கினார். அவரிடம் இருந்த ரூ.56 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து திமுக பிரமுகர் கோபி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். காட்பாடி தொகுதியில் திமுக பிரமுகர் பணம் பட்டுவாடா செய்துக் கொண்டிருந்ததால் அந்த தொகுதியில் போட்டியிடும் துரைமுருகன் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், ஆபாசமாக பேசியதாக திமுக முக்கிய பிரமுகர் கே.என்.நேரு மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அண்மையில் அவர் வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் அவர் ஆபாசமாக பேசியதாக தேர்தல் அதிகாரிகள் புகாரளித்தனர். அந்த புகாரின் பேரில் கே.என்.நேரு மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நாளை நடக்கவிருக்கும் சூழலில் அடுத்தடுத்து திமுக பிரமுகர்கள் சர்ச்சையில் சிக்குவது அக்கட்சி தலைமையை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
ஏற்கனவே, அவதூறாக பேசிய வழக்கில் திமுக எம்.பிக்கள் ஆ.ராசா மற்றும் தயாநிதிமாறனும், திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனியும் திமுகவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.





