வேளாண் சட்டங்களை எதிர்க்கட்சியினர் அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பதாக பாஜக அகில இந்திய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு !!!
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களில் உள்ள நன்மை குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோவையில் டிராக்டர் ஊர்வலம் நடைபெற்றது.பேரூரில் துவங்கிய இந்த பிரச்சார ஊர்வலத்தை பாஜக அகில இந்திய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் விவசாயத் துறையில் இருக்கின்ற விவசாயிகளுக்கு இந்த மூன்று வேளாண் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டிராக்டர் பிரச்சாரம் மேற்கொள்கிறோம். டெல்லியில் விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் அப்பாவி விவசாயிகளின் வாழ்க்கையோடு எதிர்க்கட்சிகள் விளையாடுகின்றனர்.
இதுவரை தங்கள் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்காக உதவி செய்வோம், விளைபொருளுக்கான சந்தை உருவாக்குவோம் என தேர்தல் அறிக்கையில் கூறிய காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சியினர் விவசாயிகளுக்கு ஏதும் செய்யவில்லை. அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதை பிரதமர் மோடி சட்டமாக்கி விவசாயிகளுக்கு உதவி செய்யும் போது அதை அரசியலாக்கி வருகின்றன. விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு என்ன தேவையோ அதற்கான முழுத் தொகை வழங்கப்பட்டது என்றார்.

மேலும்,விவசாயிகள் விளைவித்த பொருளுக்கு விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த சட்டங்களை கொண்டு வந்துள்ளது.இதை அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கின்றனர். திடீரென பச்சை துண்டை போட்டுக் கொண்டு வந்தால் விவசாயிகள் நம்ப மாட்டார்கள் என தெரிவித்தார்.
மேலும்,புதிய பாராளுமன்றம் குறித்து கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு பதில் அளித்தவர் அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்ற அவர் கொரோனா காலத்தில் பொதுமக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என குற்றம் சாட்டினார். மேலும்,கொரோனா காலத்தில் பொருளாதாரத்தில் விவசாயத்துறை அபரிதமான வளர்ச்சி அடைந்துள்ளது என தெரிவித்தார்.
மேலும், அம்பானி,அதானி குழுமங்கள் தானிய சேமிப்பு கிடங்குகள் அமைத்து வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் தொண்டாமுத்தூர் பகுதியில் திராட்சை விவசாயம் மற்றும் சின்ன வெங்காயம் அதிகமாக விளைவிக்கப்பட்டு வந்த நிலையில் குளிர்பதன கிடங்குகள் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
அதுபோன்ற குளிர்பதன கிடங்குகள் அம்பானி, அதானி என யார் வேண்டுமானாலும் இது போன்ற சேமிப்பு கிடங்கு அமைக்கலாம் என தெரிவித்தார். முன்னதாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களில் பொய்யும் உண்மையும் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.






