அமமுக வேட்பாளர் பாஜகவில் ஐக்கியம்… தேர்தல் நேரத்தில் திருப்பம்!
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதியின் அமமுக வேட்பாளர், திடீரென பாஜகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட அமமுக செயலாளர் தர்பாரண்யம்; இவர், வரும் தேர்தலில் திருநள்ளாறு தொகுதி அமமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், திருநள்ளாற்றில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்வில், மத்திய கால்நடை மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், மத்திய இணை அமைச்சரும், புதுச்சேரி மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளருமான அர்ஜூன்ராம் மேக்வால் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், அமமுக வேட்பாளரான தர்பாரண்யம், பாஜகவில் இணைந்தார்.
கடந்த சில நாட்கள் வரை திருநள்ளாறு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், அமமுக சின்னத்தில் தர்பாரண்யம் வாக்குச் சேகரித்து வந்த நிலையில், திடீரென அவர் பாஜகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தர்பாரண்யம் கூறுகையில், “பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்த ஜி.என்.எஸ்.ராஜசேகரன், பாஜக சார்பில் திருநள்ளாறில் போட்டியிடுகிறார். மறைமுகமாக ஆயிரம் குடும்பங்களும், நேரடியாக ஆயிரம் குடும்பங்களும் அவரை நம்பி வாழ்கின்றன். அப்படிப்பட்ட ஒருவரை எதிர்த்து நிற்க எனக்கு மனமில்லை” என்றார்.





