திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது அறவே இல்லை – கலெக்டர் பொன்னையா பேட்டி..!
வாக்கு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனைக்கூட்டம் ஆவடி பட்டாபிராம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பொன்னையா கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
முன்னதாக நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா நாடு முழுவதும் அதிக அளவில் பரவி வரும் நிலையில் அதற்கான தடுப்பு முறைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள கோரோனோ தடுப்பு மையங்கள் முறையான வகையில் பராமரிக்கப்பட்டு நோயாளிகளுக்கான் சிகிச்சை முறைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நமது மாவட்டத்திற்குட்பட்ட மருத்துவமனைகளில் 605 ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளது. தற்போது திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் 150 ஆக்சிஜன் சிலிண்டர்கள் பயன்பாட்டில் உள்ளது. அதன் மூலம் கொரோனா நோயாளிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதவிர பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நமது மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது அறவே இல்லை. அதிகப்படியான ஆக்சிஜன் சிலிண்டர்கள் நமது கையிருப்பில் உள்ளது.
இதுதவிர ஊரகப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் 20-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளது. இதுதவிர தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளது. இந்த மருத்துவமனைகளை நாம் கோரோனா தடுப்பு மையங்களாக பயன்படுத்தி வருகிறோம்.
தேவைப்பட்டால் இந்த தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பயன்படுத்துவதற்கும் முடிவு செய்துள்ளோம். அதற்கு முழு ஒத்துழைப்பு தருவதாக தனியார் மருத்துவமனைகள் கூறியிருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.






