அதிமுகவுக்கு கருணாஸ் ‘குட்பை’ : ஈபிஎஸ் மீது பரபரப்பு புகார்!
அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை கட்சி விலகுவதாக, அதன் தலைவரான நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி எங்களை நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
காமெடி நடிகராக இருந்த கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை கட்சி என்ற பெயரில் அரசியலில் குதித்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும், அதிமுகவுக்கு அவர் ஆதரவு தெரிவித்தார். அத்துடன், திருவாடானை தொகுதி எம்எல்ஏ ஆகவும் தேர்வானார். ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுகவுடன் நெருக்கம் காட்டி வந்த அவர், பின்னர் சசிகலாவுக்கு ஆதரவாக பேசியதால் அதிமுக தலைமையின் அதிருப்திக்கு ஆளானார்.
இந்நிலையில் தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக, கருணாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
சசிகலா என்னை அறிமுகம் செய்தார் என்பதற்காகவே அதிமுகவில் என்னை புறம்தள்ளி விட்டனர். எடப்பாடி பழனிசாமி எங்களை நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டார். கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம். வன்னியருக்கு இடஒதுக்கீடு தேர்தல் ஆதாயத்திற்காக தந்து மற்ற சமுதாய மக்களை அதிமுக பகைத்துக் கொண்டது.
முக்குலத்தோரின் கோரிக்கைளை அதிமுக நிறைவேற்றவில்லை. முக்குலத்தோர் சமுதாயத்தை அதிமுக அரசு புறந்தள்ளிவிட்டது என்பதால், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம். முக்குலத்தோர் புலிப்படை தமிழகத்தில் 84 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என்றார்.





