சீக்கியர்களின் பழமையான குருத்வாராவிற்கு சென்று வழிபாடு நடத்திய பிரதமர்..!
டெல்லியில் உள்ள சீக்கியர்களின் பழமையான குருத்வாரா ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தியுள்ளார். சீக்கியர்களின் ஒன்பதாம் குருவான குரு தேஜ்பகதூர் நினைவு தினத்தையொட்டி டெல்லியில் நாடாளுமன்றத்தின் அருகே உள்ள குருத்வாராவிற்கு பிரதமர் நரேந்திர மோடி திடீரென சென்றார்.
அங்கு சீக்கிய முறைப்படி வழிபாடு நடத்திய பிரதமர் பட்டாடையை வழங்கினார். அங்கிருந்த குருமார்கள் பிரதமர் மோடிக்கு சீக்கிய முறைப்படி மரியாதை செலுத்தினர். வழிபாடு முடிந்து வெளியே வந்த பிரதமருடன் அங்கு வழிபாட்டுக்காக வந்த சீக்கியர்கள் கைக்குலுக்கி மகிழ்ந்தனர்.
சிலர் பிரதமர் நரேந்திர மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். குருத்வாராவுக்கு வழிபாடு நடத்தச் சென்றபோது பிரதமர் மோடி பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இன்றி சாதாரண நபராக சென்று வழிபட்டார்.
இந்த நிகழ்ச்சி முன் கூட்டியே திட்டமிடப்படாத நிலையில் பிரதமர் திடீரென புறப்பட்டு குருத்வாரவுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.







