மதுரையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் உடல் மறு பிரேத பரிசோதனை..!
மதுரை பேரையூரில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ரமேஷ் என்ற இளைஞர் மறுநாள் காலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில் ரமேஷின் உடலை மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிடக் கோரி அவரது சகோதரர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி சுவாமிநாதன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. பிரேத பரிசோதனை செய்து 26 பதிவுகளாக 7 நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய வீடியோ அளிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது சட்டவிரோதக் காவல் மரணம் என புகார் அளித்தும் பிரேதப் பரிசோதனை நடக்கும் போது முழுமையாக வீடியோ பதிவு செய்யாதது ஏன் எனவும் அருகில் மதுரை, தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இருக்கும்போது உசிலம்பட்டியில் பிரேத பரிசோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் நெல்லை மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் மறுபிரேத பரிசோதனை செய்யவும் அதனை முழுமையாக வீடியோ பதிவு செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
தடய அறிவியல் துறையின் மூத்த மருத்துவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தவும் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் பிரேத பரிசோதனையை புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்து கொள்ள அனுமதி அளித்தும் நீதிபதி ஆணையிட்டார்.






