மக்கள் பாதை சார்பில் ஆதரவற்ற பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கி மேலும் மரக்கன்றுகள் நட்டனர்
இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஒன்றியம் நயினார்கோவில் கிராமத்தில் வசிக்கும் திருமதி.பிரசன்னா (25) என்ற ஆதரவற்ற விதவை அவர்களுக்கு மக்கள் பாதை இராமநாதபுரம் மாவட்ட அயலக குழு சார்பாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. மேலும் அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை தாய்மண் திட்டத்தின் கீழ் ஆர் எஸ் மங்கலத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் கூறுகையில்;இராஜசிங்கமங்கலத்தின் பல தெருக்களில் கடந்த ஆண்டு மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கினோம். மரக்கன்றுகளை நல்ல முறையில் பராமரித்து வருபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என கூறி இருந்தோம். தற்பொழுது ஒரு சில இடங்களில் மரக்கன்றுகள் நல்ல முறையில் வளர்ந்து வருகிறது.

மேலும் முறையான பராமரிப்பின்றி ஒரு சில இடங்களில் மரக்கன்றுகள் அழிவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. இராஜசிங்கமங்கலத்தில் பசுமை புரட்சி ஏற்பட இந்த வருடமும் மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்க இருக்கிறோம். மரக்கன்றுகளோடு பராமரிக்க வலைகளும் வழங்க இருக்கிறோம். மேலும் கண்மாய் ஊரணிகளைச் சுற்றி பனை விதை விதைப்பு நிகழ்வுகளையும் முன்னெடுக்க இருக்கிறோம் என்று கூறினார்.
இந்நிகழ்வில் இராஜசிங்கமங்கலத்தைச் சேர்ந்த அம்ஜத் , சீனி,சோமு,கனேசன், இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா மற்றும் நயினார்கோவில் ஒன்றிய பொறுப்பாளர் ஜெகன், ஜெயமணி ஆசிரியர், மக்கள் பாதை தன்னார்வலர்கள் சபரி, கார்த்திக், சரவணன், பாண்டி,ஆகியோர் கலந்து கொண்டனர்.







