மத நம்பிக்கையை கேலி, கிண்டல் செய்யும் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் : நடிகர்கள் எதிர்ப்பு
இந்துக்களின் நம்பிக்கை மீது அவதூறு பரப்புவர்களுக்கு எதிராக நடிகர் பிரசன்னா, நடராஜன் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் இந்துக் கடவுளான முருகன் குறித்து அவதூறு பரப்பியதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் நடராஜ் சுப்ரமணியம் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்று கூறியுள்ளார். ஒருவரின் நம்பிக்கையை விமர்சிக்கிறேன் என்று கொச்சைப்படுத்துவது மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல என்று நடிகர் பிரசன்னா கருத்து பதிவிட்டுள்ளார்.
அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என கூறியுள்ள பிரசன்னா அவ்வாறு செய்தால் மட்டுமே மதச்சார்பின்மை நாடாக விளங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். கந்த சஷ்டி கவசத்தை இழிவாக விமர்சித்தவர்களை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் வரும் வியாழன் அன்று கண்டன போராட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்து மதத்தையும், நம்பிக்கைகளையும் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் கேலி, கிண்டல் செய்து தரக்குறைவாக பேசி வருவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இச்செயலில் ஈடுபட்டவர்களை தேச விரோத மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி பாஜக வினர் வியாழனன்றுபோராட்டம் நடத்த வேண்டும் என்று முருகன் கூறியுள்ளார்.
காலை 10:30 மணிக்கு முருகப்பெருமான் படத்துடனும் கொடியுடன் அவரவர் வீடுகளுக்கு முன்பு போராட்டம் நடத்த வேண்டும் என்று முருகன் தெரிவித்தார். இந்த அறப்போராட்டத்தில் முருக பக்தர்கள், இறை நம்பிக்கை உள்ள அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.






