பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி..!
திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான புலிவலம், மாங்குடி, காட்டூர், திருக்கண்ணமங்கை, சேந்தமங்கலம், அடியக்கமங்கலம் போன்ற பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், வைதீஸ்வரன்கோவில், பூம்புகார், சட்டநாதபுரம், திருவங்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் குறுவை சாகுபடிக்கு நெல் நேரடி விதைப்பு செய்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நாகை, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.






