நடிகை ரோஜாவின் பாதுகாவலருக்கு கொரொனா தொற்று உறுதி..!
நடிகையும், ஆந்திர மாநில நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜாவின் பாதுகாவலருக்கு கொரொனா தொற்று உறுதியானது. இதையடுத்து சித்தூர் மாவட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யாரும் அரசு விழாக்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது என ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் குறிப்பாக சித்தூர் மாவட்டத்தில் கொரொனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நகரி தொகுதி எம்எல்ஏவான ரோஜாவின் பாதுகாவலருக்கு கொரொனா உறுதியானதை தொடர்ந்து ரோஜா 20 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
அதேபோல துணை முதல்வரின் பாதுகாவலர்கள் மூன்று பேருக்கும், அவரது மருமகனுக்கும் கொரொனா தொற்று ஏற்பட்டது. சித்தூர் மாவட்டத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என யாருக்காவது கொரொனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் 20 நாட்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் யாரும் அரசு விழாக்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.







