பிரசவத்திற்கு முன் பெண்ணுக்கு கொரொனா தொற்று இல்லை…பிரசவத்திற்கு பின் கொரொனா உறுதி..!
தூத்துக்குடியில் கொரொனா பரிசோதனை முடிவுகளை அறிவிப்பதில் ஏற்பட்ட குழப்பத்தால் பிறந்து எட்டு மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியை சேர்ந்த கருவுற்ற பெண்ணுக்கு கடந்த சனிக்கிழமை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரொனா பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனை முடிவில் அவருக்கு கொரொனா தொற்று இல்லை என்பது உறுதியானதாக ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்தப் பெண் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
நேற்று மதியம் அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு அந்த பெண்ணுக்கு கொரொனா தொற்று இருப்பதாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் குழப்பமடைந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் தாய் மற்றும் குழந்தையை ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
ஆனால் அங்கும் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக தாயும் பச்சிளம் குழந்தையையும் தனியார் ஆம்புலன்சிலேயே காத்துக் கிடந்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பின் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அந்த பெண் அனுப்பி வைக்கப்பட்டார்.







