என்எல்சி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து கோர விபத்து..!
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு பணிபுரிந்த ஊழியர்களில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர்.
விபத்து நடைபெற்ற இரண்டாவது அனல் மின் நிலையத்தின் 5வது யூனிட்டில் சுமார் 30 பேர் வரை பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் 5 பேர் மாயமாகி இருக்கும் நிலையில் தீயணைப்பு துறையினர் தேடி வருகிறார்கள். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உறவினர்கள் என்எல்சி நுழைவு வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே பாய்லர் வெடித்ததில் கடுமையாக காயமடைந்த 18 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செல்லப்படுகிறது. இதேபோல ஜூன் மாதம் ஏழாம் தேதி ஏற்பட்ட விபத்தில் 8 பேர் காயமடைந்தனர். இதில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் அதே போன்றதொரு விபத்து ஏற்பட்டுள்ளது தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.






